கடைபிடிக்க வேண்டிய
நம்பிக்கை தரும் வரிகள்
ஒற்றைக்காலில் நின்று
தவம் செய்தாலும்
மீன் கிடைக்கும்
வரையில் முயற்சியை
கைவிடாத
வெண்கொக்கு!
ஆயிரக் கணக்கினில்
அடி வாங்கினாலும்
சிலையாகும் வரையில்
உளியை உறவாக
எண்ணும் கருங்கல்!
கால்களில்லாத போதிலும்
பாறைகளில் மோதியும்
படுகுழியில் விழுந்து
கடலைச் சேரும்
குறிக்கோள்களை
கடத்திவிடாத நதி!
கைகளை
துண்டித்தாலும்
தலையைத் தறித்தாலும்
நிழல் பரப்பும்
எண்ணத்தில் மீண்டும்
தழைக்கின்ற மரம்!
இரும்பு முள்ளில்
குத்தினாலும்
ரணத்தையும் கூட
ரசித்துக்கொண்டே
வண்டியிழுக்கும்
எருதுகள்!
கனவு
நிறைவேறும்வரை
கலைத்து விடாதே
முயற்சியை ஏனெனில்..
முயற்சி மட்டுமே
முன்னேற்ற
மாளிகைக்கு
முதலிடமாகும்!
வெற்றிப்பாதை!!
உருக்கப்படும்
தங்கம் தான்
உரு மாறி
நகையாகிறது!
அறுக்கப்படும்
மரம் தான்
அழகான
ஜன்னலாகிறது!
இடிக்கப்படும்
நெல் தான்
உமி நீங்கி
அரிசியாகிறது!
துவைக்கப்படும்
துணி தான்
தூய்மை பெற்று
வெண்மையாகிறது!
ஏற்றப்படும் விளக்குதான்
இருள் நீக்கி
ஒளி தருகிறது!
தட்டப்படும் தந்தி தான்
தம்புராவில்
இசை தருகிறது!
செதுக்கப்படும்
பளிங்கு தான்
செம்மை பெற்றுச்
சிலையாகிறது!
பதப்படுத்தப்படும்
தோல் தான் பயனுள்ள
காலணியாகிறது!
மிதிக்கப்படும் மண்
தான் மிருதுவான
பானையாகிறது!
புதைக்கப்படும் விதை
தான் மண்ணை விட்டு
மரமாக எழுகிறது!
தோற்றுப்போகும்
மனிதன் தான் துணிவு
பெற்று வீரனாகிறான்!
தொடர்ந்து முயலும்
வீரன் தான் சரித்திரம்
படைத்தது வாழ்கிறான்!