ஊஹானில் பிறந்தாய்!!!
உறவாடி நுழைந்தாய்!!!
உறக்கம் கலைத்தாய்!!
உயிரை உறிஞ்சுகிறாய்!!!
முழித்து முழித்து விழிக்கிறோம்..
விழித்து விழித்து முழிக்கிறோம்
விடையொன்றும் அறியாமல்!!!
ஒற்றைத் தும்மல் இருமலில்..
கடவுச்சீட்டு எதுவுமின்றி,
கண்டம் விட்டு கண்டம் பறக்கிறாய்!!!
உல்லாசமாய் உலவுகிறாய்!!!
உணர்வின்றி புலம்புகிறோம்!!!
சனமற்ற சாலைகள்...
சலனமற்ற வீதிகள்..
முகமூடி மனிதர்கள்..
காலியாய் கடைகள்..
அடைக்கப்பட்ட அலுவலகங்கள்...
சிரிப்பில்லா சிறுவர் பூங்கா..
ஆளில்லா விமானங்கள்
அறவமற்ற அங்காடிகள்..
பாதாளம் போன பங்குச் சந்தைகள்...
கரைந்து போன கரன்சிகள்...
சல்லியாய்ப் போன மில்லியனர்கள்..
உருகிப்போன தங்கங்கள்..
உறைந்து போன வல்லரசுகள்..
அருவமும் உருவமுமிலா நிலை நிற்கின்றாய்!!!
ஆனாலும் அடிமனதில் விஸ்வரூபம் எடுக்கின்றாய்!!!
ஆலயங்களில் அர்ச்சனை, துவா, மன்றாடல் இல்லை!!
மணியோசை
பாங்கோசை கேட்கவில்லை!!!
கேளிக்கை கொண்டாட்டங்கள் இல்லை!!!
மதங்களுக்கும், கொள்கைகளுமாய்
மதியிழந்து
வெட்டிப் பேச்சும் வீண் சண்டையுமாய் விரயமாய்ப் போனது வாழ்க்கை!!!
மூச்சை முடக்கினாய்!!!
ஆணவம் அடக்கினாய்!!!
மூச்சு இருந்தால் தானே பேச்சு ?
எவர் மூச்சில் நீ எம்முள் நுழைவாயோ என்கின்ற அச்சத்தில்..
பூட்டிய கதவுகளுக்குள்ளிருந்து,
புலம்பித் தவிக்கிறோம்!! திறந்த மனதோடு அச்சத்தில் இறைஞ்சுகிறோம்!!!
நீ யார்? எதற்காக வந்தாய்?
நீ சென்று விடு , எங்களை விட்டு விடு!!!
காடழித்து நாடு கொண்டோம்!!
வீறு கொண்டு வெகுண்டழித்"தீ"ய்!!!
மரமழித்து, மலையழித்து மாளிகை கட்டினோம்!!
எரிமலையாய் எதிர்த்தடித்தாய்!!
ஆறு, ஏரி, குளம் அழித்தோம்!!!
ஆழிப்பேரலையாய் அவதரித்தாய்!!!
விலங்கினத்தையேனும் விட்டுவைத்தோமா?
வேட்டையாடி கொ(தி)ன்று குவித்தோம்!!
அவைதம் அலறல், கதறல் கேட்டு அடித்தொழிக்க வந்தாயோ?
எரிமலை எரிதழல் எம்மைச் சீண்டவில்லை என்கின்ற காரணத்தால்... ஆழிப்பேரலையை அலட்சியமாய்க் கடந்தோம் என்கின்ற காரணத்தால்,
எப்படிப் புகட்டியும் எமக்கு உரைக்கா காரணத்தால்..
ஆறாம் அறிவிற்கு, மாறா-மறவாப் பாடம் புகட்ட..
"கரோனா" வடிவில்
களமிறங்கி ஆடுகிறாய்.. கண்டங்களைச் சுழற்றுகிறாய்??
மடி கணினியும், கை பேசியுமாய்..
நிற்க நேரமின்றி நிமிர விருப்பமின்றி..
ஓடிய நாங்கள் உருக் குலைந்து நிற்கிறோம்!!!
யோசிக்கிறோம்!!!!
நேசிக்கிறோம்!!!
கணக்கும் பிணக்குமாய் பிளவுண்ட குடும்பங்கள்
பிணைந்திணைந்து நிற்கின்றன!!!
ஒத்துவராதென்று ஒதுங்கிய ஒதுக்கிய உள்ளங்கள் - இன்று அடுத்தவர் பக்க நியாயங்களை அலசி ஆய்ந்து பார்க்கின்றன!!!
நிற்க நேரமின்றி ஓடியபின்....
கற்க நிறைய இருக்கிறது என்பதைக் கற்றுக் கொண்டோம்!!!
ஆன்லைனில் ஆஃபர் ஆப்பம் ஆர்டரில்லை!! ஆட்டாங்கல் சட்னி தொட்டு, ஆவி பறக்க அவித்த இட்லி ஆசை ஆசையாய் உண்கிறோம்!!
உடற்பயிற்சி செய்கிறோம்!!
உறவாடி மகிழ்கிறோம்!!!
கூட்டாஞ்சோறு ஆக்குகிறோம்!!!
கூடி ஒன்றாய் உண்கிறோம்!!!
அப்பா அம்மாவோடு அந்தாக்ஷரி ஆடுகிறோம்!!!
பாட்டி கதை கேட்கிறோம்!!!
பரமார்த்தமாய் இருக்கிறோம்!!!
வானம்பாடியாய் ஆடிப் பாடி பறக்கிறோம்...
ஆனந்தமாய் இருக்கிறோம்!!!
சின்னஞ்சிறு கதைகள் பேசுகிறோம்!!!
சிரித்து மகிழ்ந்து இருக்கிறோம்!!
ஒரு ஒரு சுவாசத்தையும் உணர்ந்துணர்ந்து உள்ளிழுக்கிறோம்!!
நாசியில் நுழையும் மாசிலா மூச்சுக் காற்றை நன்றியோடு நினைக்கிறோம்!!
இது தானே நீ விரும்பியது ?
மனமுருகி மன்றாடுகிறோம்!!!
இறைஞ்சிக் கேட்கிறோம்!!
எம்மை இப்படியே இருக்கவிடு!!!
இனி நீ மௌனமாய் சென்று விடு .🙏 🙏 🙏